Tuesday, September 07, 2010

தேடல்

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் தமிழர்களினது

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் தமிழர்களினது அமைப்புக்கள் உட்பட, அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுக்களை நடத்த வேண்டும். அமெரிக்க ஊடகம்

சுதந்திரம் அடைந்த ஒரு நாடாகத் தனது 62ஆவது சுதந்திர நாளை சிறிலங்கா பெப்ரவரி 4ஆம் நாள் அடைந்துள்ளது. சுதந்திரம் அடைந்ததில் இருந்து முதலில் மேலாட்சிக்கு உட்பட இலங்கை, Cylone என்கிற நாடாகவும் பின்னர் 1972 வரை பொதுவுடமை, ஜனநாயகக் குடியரசுச் சிறிலங்காவாகவும் அது இருந்தது. இந்த ஆண்டின் சுதந்திர நாள் மிகவும் குறிப்பிடப்பட வேண்டியது.
ஏனெனில் அந்தத் தீவு நாட்டில் 26 வருடங்கள் தொடர்ந்து வந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததன் பின்னர் நடைபெறும் முதலாவது சுதந்திர நாள் இது.
இவ்வாறாக Voice of America ஊடகம் தலையங்கம் தீட்டியுள்ளது. தமது தலையங்கம் அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கையைப் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டு அங்கு மேலும் எழுதப்பட்டுள்ளதாவது:

பிரித்தானியாவிடம் இருந்து 1948-இல் சுதந்திரம் பெற்ற சிறிலங்காவில், முதன்மையான இரு கட்சிகள் மூலம் பெரும்பாலும் சனநாயக முறைமை விருத்தி செய்யப்பட்டு வந்துள்ளது.

இருந்தாலும் தமிழ் மக்களை நோக்கிய பெரும்பான்மை இனத்தி்ன் கொள்கைகள் என்கிற ஒரு இடமே அந்த நாட்டில் ஜனநாயகச் செயற்பாடுகளுக்கு மாறான நடவடிக்கைகளாகப் பலராலும் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் 74 விழுக்காடு மக்கள் சிங்களவர்கள்; 13 விழுக்காட்டிற்குச் சற்றுக் குறைவாகவே தமிழர்கள் உள்ளனர்; நூற்றாண்டு காலமாக இந்த இரு இனங்களும் ஒன்றாக வாழ்ந்துள்ளனர்.

அவர்களுக்கு இடையிலான முதன்மை வேறுபாடு மொழியும் மதமும் தான்.

வேறொன்றுமில்லை, சிறிலங்கா சுதந்திரம் அடைந்ததிலிருந்து சிங்களவர்களால் தாங்கள் பாரபட்சம் காட்டப்படுவதாக தமிழ் மக்கள் பயப்படத் தொடங்கியதை அடுத்து - பௌத்த சிங்களவர்கள் மற்றும் இந்துத் தமிழ்ச் சமூகங்களுக்கு இடையில் பிளவு அதிகரிக்கத் தொடங்கியது.

1956-
இல் சிங்களம் மட்டுமே நாட்டின் ஆட்சி மொழி என்கிற சட்டத்தை அரசு நிறைவேற்றிய பொழுது தமிழர்களின் அச்சம் உறுதியானது.

பின்னால் வந்த தசாப்தங்களில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல பாரபட்சமான நடவடிக்கைகளின் முதல் அடி அது.

அதன் விளைவாகத் தமிழர்களுக்குச் சுதந்திரம் வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த பல குழுக்கள் உருவாகின. அவற்றில் சில விடுதலைப் புலிகள் போன்ற, வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுத்த ஆயுதக் குழுக்கள்.

1983
தொடக்கத்தில் அரசுக்கு எதிரான தனது தீவிரவாதப் போரை விடுதலைப் புலிகள் தொடங்கினார்கள்.

அந்த அமைப்பின் தலைமை சிறிலங்கா அரச படையினரால் அழிக்கப்பட்டதை அடுத்து 2009 மே மாதத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் முடிவுக்கு வந்தது.

அதனால் தான் சிறிலங்காவின் இந்த வருட சுதந்திர நாள் குறிப்பிடத்தக்க அளவில் முக்கியமானது.

சிறிலங்கா ஒரு சுதந்திர தேசமாக உருவானதை மட்டுமே அது குறிக்காமல், உள்நாட்டுப் போர் முடிந்த பின்னர் நடைபெறும் முதல் தேசிய ஒருமைப்பாட்டு நிகழ்வாகவும் இருக்கிறது.

இந்தச் சந்தர்ப்பத்தை சிறிலங்கா அரசு நிலையான அமைதியை எட்டுவதற்காகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

அதன் அனைத்துக் குடிமக்களும் கருத்து இணக்கத்தையும் நியாயத்தையும் எட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அத்துடன், அதிகாரத்தைப் பரவலாக்குவது தொடர்பான புதிய பொறிமுறை குறித்து (on new mechanisms for devolving power) உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் தமிழர்களினது அமைப்புக்கள் உட்பட, அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுக்களை நடத்த வேண்டும்.

ஏனென்றால், நாட்டின் அனைத்துக் குடிமக்களும் சமமாக அரசில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் போதும் சட்டத்தின் முன் சமமாக மதிக்கப்படும் போதும் தான் சிறிலங்காவின் சனநாயகப் பாரம்பரியத்திற்கான உறுதிப்பாடுகள் உயிர்ப்புடன் இருக்க முடியும்.